"வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய கால நிர்ணயம் செய்ய வேண்டும்" - உயர் நீதிமன்றம்
வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தலைமைப் பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நல்லசுர ரவிரெட்டி என்பவர் வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நிலுவையில் உள்ள பல வழக்குகளில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்படாமல், வாய்தா மட்டுமே கேட்கப்படுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். அப்போது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி 2013ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்டதாக நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, இந்த விதியை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு பதில்மனு தாக்கல் செய்ய கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Next Story