நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக திமுக மனு - அறிக்கை அளிக்க உத்தரவு

முதலமைச்சருக்கு எதிராக திமுக தொடர்ந்த புகாரில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக திமுக மனு - அறிக்கை அளிக்க உத்தரவு
x
நெடுஞ்சாலைத் துறை பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு செய்ததாக கூறி, முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா  முன்பு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண், புகார் மீதான ஆரம்பக் கட்ட விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.

முதல்வரின் உறவினர்கள் கடந்த 1991 முதல் அரசின் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

முதல்வரின்  மகன் என்ற காரணத்திற்காக அவருக்கு அரசு ஒப்பந்தங்களை பெற தகுதி இல்லையா? எனவும் கேள்வி எழுப்பிய அவர்,  உலக வங்கி கண்காணிப்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதல் தொகை ஏதும் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். 

லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரகம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் வருவதால் இந்த விசாரணை எப்படி நியாயமாக இருக்கும் என திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேள்வி எழுப்பினார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புகார் மீது அன்றாடம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் வரும் 17ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்