ஆந்திர வனத்துறை அதிகாரி கொலை வழக்கில் 3 பேர் கைது : ஆந்திர போலீசாரின் காரை வழி மறித்த பொதுமக்கள்
கொலை வழக்கு தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்தவர்களை கைது செய்ய வந்த ஆந்திர போலீசாரை பொதுமக்கள் வழி மறித்து சிறைப் பிடித்தனர்.
ஆந்திராவின் கடப்பா பகுதியில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, வனத் துறையினருக்கும் செம்மரம் வெட்டும் கும்பலுக்கும் இடையே நடந்த மோதலில், வனத்துறை அதிகாரி அசோக்குமார் கொல்லப்பட்டார். கொலை நடந்த இடத்தில் கிடந்த 2 செல்போன்களை வைத்து ஆந்திர போலீசார் விசாரித்தனர். அப்போது, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்த ஆந்திர போலீசார், நேற்று இரவு 12 மணியளவில் பதிவெண் இல்லாத 3 கார்களில் வந்து சகாதேவன், சடையன், கோவிந்தன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதனை அறிந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, ஆந்திர போலீசாரின் காரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த தமிழக போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், கோவிந்தனை மட்டும் ஆந்திர போலீசார் அழைத்துச் சென்றனர்.
Next Story