நரம்பு தசை செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுவனை குணப்படுத்தி அரசு மருத்துவர்கள் சாதனை...
நரம்பு தசை செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் ஜெகநாதன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களின் 81 நாள் தொடர் சிகிச்சையால் குணமடைந்துள்ளான்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகாராஜாபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் ஜெகநாதன், நரம்பு தசை செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மே 28 ஆம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளான். மாணவனுக்கு அரசு மருத்துவர்கள் 81 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து நன்கு பராமரித்ததன் விளைவாக தற்போது குணமடைந்து நடக்கும் நிலைக்கு வந்துள்ளதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மருதுபாண்டி தெரிவித்தார். சிகிச்சை அளிக்கப்பட்ட 81 நாட்களில் 59 நாட்கள் மாணவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவர்கள், பிசியோதெரப்பிஸ்ட் மற்றும் செவிலியர்கள் கடும் முயற்சியால் தற்போது 9 வயது சிறுவன் ஜெகநாதன் நடக்கும் நிலைக்கு வந்துள்ளதாக மருதுபாண்டியன் தெரிவித்தார். இதே சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் 30 லட்சம் ரூபாய் வரை செலாவாகியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
Next Story