விலங்குகளின் உயிரிழப்பை தடுக்க புதிய முயற்சி - 2 இடங்களில் லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தம்
சத்தியமங்கலம் வனப்பகுதியில், சாலையை கடக்கும் விலங்குகள், வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்கும் வகையில், லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட சாலைகளை கடக்கும் விலங்குகள், வாகனங்கள் மீது மோதி அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. விலங்குகளின் உயிரிழப்பை தடுக்கும் விதமாக, பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து, லண்டன் ரப்போர்டு ஃபவுண்டேஷனின் நிதியுதவியோடு லேசர் சென்சார் சிக்னல் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளனர். முதல்கட்டமாக, யானைகள் அதிகம் கடக்கும் பகுதியான சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் இந்த சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது, இந்த கருவியில் இணைக்கப்பட்டு உள்ள லேசர் சென்சார் சிக்னல் மூலம், வனத்துறையினரின் செல்போனுக்கு குறுந்தகவல் சென்றடையும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால் லேசர் சென்சாரின் எச்சரிக்கையின்படி வாகன ஓட்டிகள், மெதுவாக வாகனத்தை இயக்குவதால், விலங்குகள் அடிபட்டு உயிரிழப்பது தடுக்கப்படும் கூறப்படுகிறது. மான் போன்ற சிறிய விலங்குகள் சாலையை கடக்கும் போது மஞ்சள் விளக்கும், யானைகள் கடக்கும் போது சிவப்பு விளக்கு எரியும் எனவும், இந்த முயற்சி வெற்றி அடையும் நிலையில், வனவிலங்குகள் அதிகம் கடக்கும் சாலைகளில் கருவியை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story