லோக் ஆயுக்தா சட்ட முன் வடிவின் முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்ட முன் வடிவின் முக்கிய அம்சங்கள்
லோக் ஆயுக்தா சட்ட முன் வடிவின் முக்கிய அம்சங்கள்
x
அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு லோக் ஆயுக்தா.

இந்த அமைப்பில் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். நான்கில் இருவர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 

முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வானவர்கள் ஆளுநரால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்படுவார்கள். பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஊழல் தடுப்பு மற்றும் பொது நிர்வாகத்தில் 25 ஆண்டு அனுபவம் கொண்ட நபர் லோக் ஆயுக்தா தலைவராக தகுதி படைத்தவர்.

லோக் ஆயுக்தா தலைவராக இருப்பவர் எந்த குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக இருக்க கூடாது, நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்க கூடாது, அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டவராக இருக்க கூடாது, வேறு எந்த ஆதாய பதவிகளையும் அவர் வகிக்கக் கூடாது. தலைவர் பதவிக்கு வருபவருக்கு, 45 வயதிற்கு குறைவாகவோ 70 வயதிற்கு மேலோ இருக்க கூடாது.

லோக் ஆயுக்தா உறுப்பினர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள். லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவரால், செயலாளர் மற்றும் விசாரணை யக்குனர் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

லோக் ஆயுக்தா அமைப்பு தடையின்றி செயல்பட​ தேவையான அலுவலர்களை மாநில அரசு கொடுக்க வேண்டும். இன்னாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அரசு ஊழியர்கள், அரசின் நிதி பெறும் அமைப்புகள், வாரியங்கள், சங்கங்கள்  தன்னாட்சி அமைப்புகள், ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை லோக் ஆயுக்தா விசாரிக்கும்

அரசு ஊழியர்களை ஊழல் செய்ய தூண்டும் அல்லது துணை போகும் எந்த நபரையும் விசாரிக்க லோக் ஆயுக்தாவிற்கு அதிகாரம் உள்ளது. லோக் ஆயுக்தா எந்த விசாரணையும் தொடங்க யாரிடமும் முன் அனுமதி பெற தேவையில்லை. விசாரணைக்கு தேவைக்கேற்ப எந்த அலுவலரையும் பயன்படுத்துக் கொள்ளலாம். யாரை வேண்டுமானாலும் நேரில் வரவழைத்து விசாரிக்கலாம்.

எந்த ஆவணத்தையும் கொடுக்கும்படி அரசிடம் கோரும் அதிகாரம் லோக் ஆயுக்தாவிற்கு உண்டு. இந்திய பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள், அரசு ஊழியர் பணி நியமனம், பணி மாறுதல், பணி நீக்கம், பணி ஓய்வு ஆகியவற்றை விசாரிக்க கூடாது. 

வெகுமதிகள் மற்றும் பரிசுகள், உள்ளாட்சி அமைப்புகள், லோக் ஆயுக்தா அமைவதற்கு முன்பு தொடங்கப்பட்ட விசாரணைகள் ஆகியவற்றையும் விசாரிக்க முடியாது. லோக் ஆயுக்தா அமைப்பு தானாக முன்வந்து புகார்களை பதிவு செய்வது குறித்து, சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான புகார்களை லோக் ஆயுக்தாவின் விசாரணைப்பிரிவு புலனாய்வு செய்யும். அதிகாரிகளுக்கு எதிரான புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரிக்கப்படும். 

விசாரணை நடக்கும் போது குற்றம்சாட்டப்பட்டவரை பணியிடை நீக்கம் செய்ய, அந்த நபரின் மேல் அதிகாரிக்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்யலாம். அந்த பரிந்துரையை, நிராகரிக்க அரசுக்கு வாய்ப்பு உண்டு. விசாரணைப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை அ​ளிக்கும் அறிக்கையை ஆராய்ந்து புகார் சரியானதா இல்லையா என லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். 

தனது தரப்பு வாதங்களை வைக்க புகாருக்கு உள்ளானவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். 

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக் ஆயுக்தா பரிந்துரை செய்யும். லோக் ஆயுக்தா பரிந்துரைப்படி குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர் மீது அரசும், சட்டமன்ற உறுப்பினர் மீது சபாநாயகரும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சரும், முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டிற்கு ஆளுநரும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. தவறான புகார் கொடுப்பவர்களுக்கு லோக் ஆயுக்தா அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.

போலி புகார் அளித்தவர் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். லோக் ஆயுக்தாவிற்கு எதிராகவே புகார் வந்தால் அதை லோக் ஆயுக்தா விசாரிக்காது. லோக் ஆயுக்தா நீதிபதிகளை பணிநீக்கம் செய்ய 45 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்துடன் புகார் கொடுக்க வேண்டும். ஆளுநர் உத்தரவின் பேரில் புகாரை உயர்நீதிமன்றம் விசாரிக்கும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பணி நீக்க ஆணையை ஆளுநர் வெளியிடுவார்.

Next Story

மேலும் செய்திகள்