"ராஜஸ்தான் மக்கள் நலனே பிரதானம்" - சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் மறைமுக எச்சரிக்கை

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு முழு காலத்தையும் பூர்த்தி செய்யும் என, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மக்கள் நலனே பிரதானம் - சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் மறைமுக எச்சரிக்கை
x
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி உருவாகி உள்ள நிலையில் சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் கூட்டம், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலோட் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றும், 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும் என்றும் தெரிவித்தார். ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜ.க. சதித்திட்டம் வெற்றி பெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாருக்காவது கட்சியில் அதிருப்தி இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும், சச்சின் பைலட் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளதாகவும் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். பதவி உள்ளிட்டவைகளில் சிக்கல் இருப்பதாக கருதினால் உரிய அமைப்பில் முறையிடலாம் என்றும், அதற்கு தீர்வுக்காண கட்சி தயாராக உள்ளதாகவும் தெரிவித்த ரன்தீப் சுர்ஜேவாலா, கடந்த 48 மணி நேரத்தில் பலதமுறை தற்போதைய அரசியல் சூழல் குறித்து சச்சின் பைலட்டிடம் காங்கிரஸ் தலைமை பேசியதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நிலையான ஆட்சி அமைக்க ராஜஸ்தான் மக்கள் அதிகாரம் வழங்கி உள்ள நிலையில், காங்கிரஸ்  எம்.எல்.ஏ.க்கள் அதனை உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். தனிநபர்கள் விருப்பத்தை விட, மக்கள் நலனே பிரதானம் என்பதே கட்சியின் நிலைப்பாடு என உறுதிபடத் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்