இந்தி திணிப்பு தொடர்பான துணைக் கேள்வி - தி.மு.க. உறுப்பினர்கள் கேட்க சபாநாயகர் அனுமதி மறுப்பு
இந்தி திணிப்பு குறித்து துணைக் கேள்வி கேட்பதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்
மக்களவையில் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் அரவிந்த் குமார் ஷர்மா, இந்தியை நாட்டின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தியை பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகவும், மத்திய அரசு பணிகளில் ஹிந்தியின் பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக அலுவல் மொழிகள் துறை முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு பற்றி துணைக் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்த தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தின் முக்கியமான விஷயம் குறித்து பேசுவதற்கு அனுமதி மறுப்பது தவறு என ராகுல்காந்தி குறிப்பிட்டார். இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Next Story