கட்டிய மனைவியை கொலை செய்த கணவன் - பதற வைக்கும் வாக்குமூலம்
நூறு சவரன் நகையுடன் திருமணம் செய்த மனைவி மீது, பாம்பை ஏவி கொலை செய்தது ஏன் என கணவன் அளித்துள்ள வாக்குமூலம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் என்ற பகுதியைச் சேர்ந்த சூரஜ்க்கும், உத்ரா என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. 96 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு சொகுசுக் கார் ஆகிய சீர்வரிசையுடன் திருமணம் செய்து வந்த உத்ராவுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. மகிழ்ச்சியான வாழ்வின் நடுவே, 2-வது முறையாக பாம்பு கடித்து உத்ரா உயிரிழந்தார். பலரும் அனுதாபம் தெரிவித்த நிலையில், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சூரஜ் அளித்த வாக்குமூலம் பதற வைத்துள்ளது.
வங்கி பெட்டகத்தில் இருந்த நகைகளை ஊதாரித்தனமாக செலவு செய்தும், கூடுதல் வரதட்சனை கேட்டும் துன்புறுத்தி உள்ளனர். இதனால், அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்ற உத்ரா, விவகாரத்து கோரியுள்ளார். வரதட்சணையை திருப்பி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுமே என யோசித்த கணவன் சூரஜ், தனது மனைவியை தீர்த்துக் கட்டியுள்ளார். மரணம் இயற்கையாக இருக்க வேண்டும் என முடிவு செய்த அவர், முதல் முறை அணலி வகை பாம்பை ஏவியபோது, சிகிச்சையால் உத்ரா உயிர்பிழைத்தார். எனினும் 2-வது முறையாக கருநாகப் பாம்பை வாங்கி வந்த அவர், பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து பின்னர், பாம்பை மனைவி மீது வீசி கொத்த வைத்துள்ளார்.
தமது கொலை அரங்கேற்றத்தை கூறிய அவர், வீட்டின் அருகே புதைத்து வைத்திருந்த நகைகளையும் போலீசார் மீட்டனர். இந்த விவகாரத்தில், பாம்பை கொடுத்த நண்பன் சுரேஷ், ஜூரஜ் மற்றும் அவரது தந்தை ஆகியோர் சிறையில் உள்ளனர். வரதட்சணைக்காக கட்டிய மனைவியை, பாம்பை ஏவி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

