நாய்க்குட்டி போல பின்னால் வரும் யானை - பாசத்துடன் யானையை பராமரிக்கும் குடும்பம்
கேரளாவில் இரண்டு வயது பெண் குழந்தைக்கும் பிரமாண்டமான யானைக்கும் உள்ள பாசப்பிணைப்பு, காண்போரை பரவசப்படுத்தி வருகிறது.
சமீபத்தில்தான் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் மனித நேயம் கொண்டவர்களை கொந்தளிக்கச் செய்தது. ஆனால், அதே கேரளாவில் இரண்டே வயதாகும் ஒரு குட்டிப் பெண் மிகப் பெரிய யானை ஒன்றை நாய்க்குட்டி போல வளர்த்து வரும் காட்சிகள் உலகையே மனம் குளிர வைத்துள்ளது.
இந்தக் குழந்தையின் பெயர் பாமா. யானையின் பெயர் உமா தேவி. சமீப காலமாக கேரள மீடியாக்களில் இந்தக் குழந்தையும் இவளின் வளர்ப்பு யானையும்தான் முக்கிய வி.ஐ.பிகள்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருமேனி என்பவரின் குட்டி மகள்தான் பாமா. திருமேனி யானை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர். 8 வருடங்களாக இவர் உமாதேவி என்ற யானையை வளர்த்து வருகிறார். பாமா பிறந்தது முதலே இந்த யானையோடு நட்பாக பழக ஆரம்பித்துவிட்டாளாம். யானையும் பாமாவின் அதட்டலுக்கும் அன்புக்கும் அடிபணிந்து நடக்கிறதாம். இயல்பை மீறிய இந்த இனிய பிணைப்பைப் பார்க்கும் அனைவருமே ஒப்புக் கொள்கிறார்கள்... கேரளா கடவுளின் சொந்த தேசம்தான்!
Next Story