"அந்தமான் பகுதிகளில் சீன கப்பல்கள் நடமாட்டம் அதிகரிப்பு" - கடற்படை தளபதி கரம்பீர் சிங் தகவல்
அந்தமான் - நிக்கோபர் கடற்பகுதியில் சீன கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாகவும் கடந்த செப்டம்பரில் நுழைந்த கப்பல் ஒன்று விரட்டி அடிக்கப்பட்டதாகவும் கடற்படை தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கடந்படை தளபதி கரம்பீர் சிங், அந்தமான் - நிக்கோபர் தீவு பகுதிகளில் அண்மைக் காலமாகவே, சீன கப்பல்களின் வருகை அதிகரித்து வருவதாக தெரிவித்தார். சீன கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும், கடந்த செப்டம்பரில் சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதியில் அத்து மீறி நுழைந்து போர்ட் பிளேயர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சீன கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட சீன அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், அனுமதி பெற வேண்டும் என்றும், அந்தமான் கடற்பகுதியில் 7 முதல் 8 கப்பல் காணப்படுவதாகவும், கடற் கொள்ளையர்களை கண்காணிக்கும் பணியிலும், ஆய்வு பணியிலும் ஈடுபடுவதாக தெரிவித்த கடற்படை தளபதி, சீனா செயற்கைக் கோளை ஏவும்போதும் சீன கப்பல்கள் இந்த பகுதியில் தென்படுவது வழக்கம் என்றும், தெரிவித்துள்ளார். கடந்த 2008-ல் இருந்தே அந்தமான் நிக்கோபர் பகுதியில், சீன கப்பல்கள் நடமாட்டம் இருந்து வருவதாகவும் கடற்படை தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
Next Story