முத்தலாக் வழக்கு கடந்து வந்த பாதை...

முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கொண்டு வர காரணமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு....
முத்தலாக் வழக்கு கடந்து வந்த பாதை...
x
முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்கள், முறைப்படி பிரிய, விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகின்றனர். ஆனால், விவாகரத்து விஷயத்தில் இஸ்லாமியர்கள் தங்களின் மத கோட்பாட்டின் படி, தனி சட்டத்தை கடைபிடிக்கின்றனர். அதற்கு பெயர் தான் முத்தலாக். தலாக் என்பதற்கு அரபி மொழியில் விவாகரத்து என்பது பொருள். இஸ்லாமிய மதத்தில் திருமணம் ஆனவர்கள் பிரிய முடிவு செய்தால், 3 முறை தலாக் என கூற வேண்டும் என்பது விதி. 

தலாக் என்பது வாய்வழியாகவோ, எழுத்து மூலமாகவோ, குறுந்தகவல் போன்ற தொழில்நுட்பத்தின் உதவியுடனோ தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை தலாக் சொல்வதற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி தேவை என சொல்லப்படுகிறது. ஆனால், ஒரு சிலர் ஒரே நேரத்தில் தொடர்ந்து 3 முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்து விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதனால் தலாக் என்பது பெண்களின் உரிமையை பறிக்கும் செயல் எனவும், இதனை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. 

கடந்த 2015ம் ஆண்டு உத்தரகாண்டைச் சேர்ந்த Shayara Bano என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் ஒரே நேரத்தில் தொடர்ந்து மூன்று முறை தலாக் சொல்லி, தன்னை தன் கணவர் விவகாரத்து செய்துள்ளதாகவும், முத்தலாக் முறை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்த 4 இஸ்லாமிய பெண்களும் இதே பிரச்சினையை குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்ததால் அவர்களும் இந்த வழக்கில் மனுதாரர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 

பல காலமாக விவாத பொருளாக இருந்து வந்த  முத்தலாக் முறை குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்,  5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக், சட்டப்படி செல்லத்தக்கதா என அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. 

விசாரணை முடிவில், முத்தலாக் சட்ட விரோதம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி  தீர்ப்பு வழங்கியது. 3 நீதிபதிகள் முத்தலாக்கிற்கு எதிராகவும், 2 நீதிபதிகள் ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் முத்தலாக் சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டது. 
முத்தலாக் முறை தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்