நேபாளத்தில் சிக்கியிருந்த தமிழக பக்தர்கள் 16 பேர் சென்னை வருகை
நேபாளத்தில் மோசமான வானிலையால் சிக்கி தவித்தவர்களில் தமிழகத்தை சேர்ந்த 19 பேர் மீட்கப்பட்டனர்.அவர்களில் 16 பேர் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்தனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 23 பேர் கடந்த ஜுன் 20ந் தேதி நேபாள நாட்டில் உள்ள கைலாஷ்,மானசரோவருக்கு யாத்திரை சென்றனர். அங்கு கடும் மழை, குளிர், நிலச்சரிவு ஏற்பட்டு வழக்கத்திற்கு மாறாக மோசமான வானிலை நிலவியது. விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் நேபாளம் சென்ற ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்தனர். அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க மத்திய அரசு வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டது. இதேபோல் தமிழக அரசும் 2 அதிகாரிகளை நேபாளத்திற்கு அனுப்பியது.
தமிழகத்தை சேர்ந்த 23 பேரில் 4 பேர் கடந்த 30ந் தேதி சென்னை திரும்பி விட்ட நிலையில் மற்ற 19 பேர் நேபாள அரசு உதவியுடன் சிறிய ரக விமானம் மூலம் சீன எல்லை அருகே உள்ள பட்லா கோட் பகுதியில் மீட்கப்பட்டனர். அனைவரும் விமானம் மூலம் லக்னோ அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 3 பேர் டெல்லி சென்ற நிலையில், 7 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்தனர்.
இதனிடையே நேபாளத்தில் உயிரிழந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரனின் உடல் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டு வரப்பட்டு பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Next Story