தென்னிந்தியாவை புறக்கணிக்கிறதா பாலிவுட்? - ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து, ரசூல்பூகுட்டி குற்றச்சாட்டு

இந்திய சினிமாவின் முகவரியாக கருதப்படும் பாலிவுட் திரையுலகம் மீது நடிகை கங்கனா ரணாவத், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து ரசூல் பூக்குட்டி கூறியுள்ள குற்றச்சாட்டு மேலும் ஒரு புயலை கிளப்பியுள்ளது.
தென்னிந்தியாவை புறக்கணிக்கிறதா பாலிவுட்? - ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து, ரசூல்பூகுட்டி குற்றச்சாட்டு
x
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14- ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கத்தால் மன அழுத்தத்தில் இருந்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. 

இது குறித்து கருத்து கூறி நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டில்  திறமையான நடிகர்களை மட்டம் தட்டி வாரிசு நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பரபரப்பு குற்றஞ்சாட்டினார். இதனால் மற்றவர்களுக்கான வாய்ப்பு பறிபோவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பாலிவுட்டில் வாரிசு அரசியல் என்ற பிரச்சனைகளை முன் வைத்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

இதற்கு ஆதரவாக பாலிவுட் பிரபல இயக்குனர் சேகர் கபூர் தமது டிவிட்டர் பதிவில் ஆஸ்கர் விருது வென்றது தான் இதற்கு காரணம் என கூறினார். 

இந்நிலையில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சிறந்த ஒலிக் கலவைக்காக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தன்னையும் பாலிவுட் திரையுலகினர் ஒதுக்கியதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். 

இது குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ரசூல் பூக்குட்டி, சேகர் கபூரை டேக் செய்து ஆஸ்கர் விருது வென்ற பிறகு இந்தி பட உலகம் தம்மை விலக்கி வைத்ததாக கூறினார். 

யாரும் தமக்கு வாய்ப்பு தரவில்லை என்றும் சில தயாரிப்பு நிறுவனங்கள் நீங்கள் எங்களுக்கு தேவையில்லை என கூறியதாக புகார் கூறியுள்ளார். 

ஹாலிவுட் செல்ல பல வாய்ப்புகள் வந்தும் இந்தியாவை விட்டு செல்ல மனமில்லாததால் போகவில்லை என ரசூல் பூக்குட்டி கருத்து பதிவிட்டுள்ளார். 

இது தவிர பாலிவுட்டில் புதிதாக அறிமுகமாகும் நடிகர்களின் வளர்ச்சியை நடிகர் சல்மான் கான் தடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அடுத்தடுத்து தொடுக்கப்படும் சரமாரி குற்றச்சாட்டுக்களால் பாலிவுட் திரையுலகம் திக்கு முக்காடி போயுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்