Sunil Anand | TVK | "விரைவில் காரமடை குடிநீர் திட்டம் தொடக்கம்.." - சுனில் ஆனந்த் MLA தகவல்
காரமடை குடிநீர் திட்டம் விரைவில் தொடக்கம் - எம்.எல்.ஏ. தகவல் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரமடை ஒன்றியத்தில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்த குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக எம்.எல்.ஏ. சுனில் ஆனந்த் தெரிவித்தார். ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம், இலுப்பநத்தம், இரும்பறை, மூடுதுறை, சின்ன கள்ளிப்பட்டி ஆகிய 6 ஊராட்சிகளுக்கு திருப்பூர் 2-ம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 20 எம்.எல்.டி. குடிநீர் வழங்க வேண்டும் என அவர் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, குடிநீர் திட்டங்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், காரமடை திட்டத்தையும் அதில் சேர்க்கக் கோரி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடியை சந்தித்து எம்.எல்.ஏ. கடிதம் வழங்கியிருந்தார். இத்திட்டத்தை அறிவிப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு மாதத்திற்குள் அரசாணை வெளியிடப்படும் என்றும் செயலாளர் உறுதியளித்ததாகவும் சுனில் ஆனந்த் தெரிவித்தார். மேலும், டெண்டர் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திட்டப்பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
