Negombo Jail Riot| சிறைக்குள் கொடூர கலவரம்.. கொத்து கொத்தாக மரணம்.. சுற்றிவளைத்த ராணுவம்

இலங்கையின் நீர்கொழும்பு சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில், பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தித் தொகுப்பைக் காணலாம்... நீர் கொழும்பு சிறையில் வெடித்த மோதலும், அதைத் தொடர்ந்து உருவான பதற்றமான சூழலின் ஒரு பகுதிதான், இந்தக் காட்சி,... நீர்கொழும்பு சிறையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ரகசியத் தகவலை, அதிகாரி ஒருவரிடம் கைதி ஒருவர் கசியவிட்டதே மோதல் ஏற்படுவதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், இரண்டு நாட்களாக நீடித்து வந்த மோதல், பயங்கர கலவரமாக மாறியதில் சிறைக் கைதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1,800-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள இந்தச் சிறையில், கைதிகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தற்போதைய நிலவரப்படி, சிறைச்சாலையைச் சுற்றி ராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு, நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், வான்வழியாகக் கண்காணிக்கும் பணியில் விமானப்படையின் 'பெல் 412' ரக ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் கேமராக்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில், இது மிகவும் மோசமான சிறைச்சாலை வன்முறைச் சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com