

பேஸ்புக், ட்விட்டர், ஜி மெயில் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களையும் ஆதாருடன் இணைப்பதை கட்டாயமாக்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் ரூபன் உயர் நீதிமன்றத்தில் பொதுவழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவில் கூறியுள்ள கோரிக்கை மிகவும் ஆபத்தானது எனவும், தனிநபர்களின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது என்றும் இந்த கோரிக்கையை எழுப்ப மனுதாரருக்கு என்ன உரிமை உள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
காவல் துறையில் புகார் அளித்தாலே தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்டவரும் தண்டிக்கப்பட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதுதொடர்பாக ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், சமூக வலைதளங்கள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களை கையாள்வது குறித்தும் அன்றைய தினம் சைபர் கிரைம் டிஎஸ்பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.