வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கு, நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், சென்னை நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினர். மேலும், கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகளின் நிலை குறித்தும், அவற்றின் மூலம் எவ்வளவு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது என்ற விபரத்தையும், வரும் 17 ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் மக்கள் தண்ணீரின்றி அவதிப்படுவதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், வேறு எந்தெந்த வழிகளில் தண்ணீர் பெறப்படுகிறது என்பது குறித்து தெரிவிக்குமாறும் உத்தரவிட்டனர்.