

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 30 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில், ஆரம்ப நிலை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்களில், 25 விழுக்காடு இடங்களை, ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் வழி வகுக்கிறது. அதன்படி, 1 லட்சத்து 21 ஆயிரம் இடங்களில், போட்டியில்லாத பள்ளிகளில், 30 ஆயிரம் இடங்கள் கடந்த 31 ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார். மீதமுள்ள இடங்களுக்கு போட்டி இருப்பதால், குலுக்கல் முறையில் வரும் ஆறாம் தேதி இடங்கள் ஒதுக்கப்படும் எனவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.