

ஆரணி அருகே அடிப்படை வசதிகள் இல்லாத அரசுப் பள்ளிக்கு, தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெசல் புதுப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளி வளாகம் மேடு, பள்ளம் நிறைந்து காணப்பட்டதால், பள்ளி நிர்வாகம் சார்பில், கட்டிட கழிவுகளை கொட்டி நிரப்பியதாக கூறப்படுகிறது.
பள்ளி வளாகம் முழுவதும் கொட்டப்பட்டுள்ள செங்கல் மற்றும் கருங்கற்கள் மீது நடக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று 3 ஆம் வகுப்பு மாணவன் கௌதம் எதிர்பாராத விதமாக கருங்கற்கலில் தவறி விழுந்ததில், அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, வீட்டிலேயே தங்கவைத்தனர். மேலும், இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களையும் அவர்கள் திரும்ப அழைத்துச்சென்றனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.