வசூல் வேட்டையில் இறங்கிய போலி உணவு பாதுகாப்பு துறை.. பிரியாணி கடைக்காரர் வைத்த செக்
திண்டுக்கல்லில் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் பிரியாணி கடையில் ரூ. 500 லஞ்சம் கேட்ட போலி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த ஹோட்டல் உரிமையாளர்
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் எழில் முருகன்(49) இவர் பேருந்து நிலையம் அருகே ஏ எம் சி சாலையில் கேகே பிரியாணி என்ற கடையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று (07.04.25) அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணவாய்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம்(45) கேகே பிரியாணி கடைக்கு சென்று நோட்டமிட்டுள்ளார்.
பின் வெளியே வந்த கடைக்கு எதிரே இருந்து கொண்டு தனியார் பிரியாணி கடை உரிமையாளருக்கு போன் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பேசுவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அடுத்து 5 நிமிடம் காத்திருக்கவும் என ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார்.
உடனடியாக ஒட்டல் உரிமையாளர் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை உயர் அதிகாரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு யாரும் உணவகத்திற்கு ஆய்வு செய்ய வந்துள்ளார்களா? என ஹோட்டல் உரிமையாளர் கேட்டுள்ளார்.
அவ்வாறு இல்லை என்பதே அறிந்து கொண்டு சம்பந்தப்பட்ட நபரை ஹோட்டலில் வேலை செய்யும் ஆட்களைக் கொண்டு மடக்கி பிடித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் போலி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சண்முக சுந்தரத்தை கைது செய்து மேலும் இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் வேறு எங்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எனக் கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் கடந்த 3 நாட்களாக கொடைக்கானல், ஓட்டன்சத்திரம் பகுதிகளில் இது போன்று ஏமாற்றி பணம் பறித்ததாக தெரிகிறது
மேலும் ஹோட்டல் உரிமையாளரிடம் போலி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சண்முகசுந்தரம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
