திருச்சியில் பரவி வரும் புது விதமான போதை கலாச்சாரம்...

திருச்சியில் வலி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தும் புது போதை கலாச்சாரம் பரவி வருகிறது. காவல்துறையினரையே அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
திருச்சியில் பரவி வரும் புது விதமான போதை கலாச்சாரம்...
Published on

திருச்சியில் சில நாட்களுக்கு முன்னதாக போலீசார் நடத்திய சோதனையில் மூட்டை, மூட்டையாக போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியானது. மருந்து கடைகளில் கிடைக்கும் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி , தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்ளும் போதை இளைஞர்கள் குறித்த அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. திருச்சியை சேர்ந்த அருண், தர்மா என்ற 2 இளைஞர்கள் இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். இவர்களின் செயலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞர் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் அஜித்குமார் கைகளில் வலி நிவாரணி மாத்திரைகள் கலந்த போதை மருந்தை செலுத்தியுள்ளனர். இதில் அஜித்குமாரின் கைகள் மரத்துப் போய் உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் இருவர் மட்டுமின்றி வலி நிவாரண மாத்திரைகளை அனுமதியின்றி விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பொறியாளரான திலகன் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த கவுரி சங்கர் என்பவர் இந்த முறையில் போதை ஊசிகளை செலுத்தியுள்ளார். இதில் திலகனின் கைகளும் மரத்துப் போய் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்தடுத்த இந்த 2 சம்பவங்களால் திருச்சி மாநகர போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக தந்தி டிவி செய்தியாளரிடம் பேசிய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். போதைக் கலாச்சாரத்தை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது பரவி வரும் இந்த புதுவிதமான போதை கலாச்சாரம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com