

சென்னையில் ஓடும் கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த தீர்ப்பாயம், சென்னை ஆறுகளை பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட காரணமான தமிழக பொதுப் பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக பொதுப் பணித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, தேசிய பசுமை தீர்ப்பாய சட்டப்படி, தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் என்று கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.