திருப்பூரில் ஜவுளி நிறுவனம் நடத்தி வந்த தொழிலதிபர், சிவமூர்த்தி கடந்த 25 ஆம் தேதி காணாமல்போனார்.. இந்நிலையில், அவரின் கார் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே போலீசாரிடம் சிக்கியுள்ளது. காரில் இருந்தவர்களிடம் விசாரித்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சிவமூர்த்தியின் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த விமல் , மூன்று கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக சிவமூர்த்தியை அழைத்து சென்றதும், அவரை நான்கு பேர் சேர்ந்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவமூர்த்தியின் சடலத்தை ஒசூரில் உள்ள ஏரி ஒன்றில் வீசிய அந்த கும்பல், அவரது காரில் வலம் வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது .. இது தொடர்பாக விமல், மணிபாரதி, கவுதமன் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மூர்த்தி என்பவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கெளவரப்பள்ளி அணையில் சிவமூர்த்தியின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். முதுகில் மைல் கல் கட்டப்பட்ட நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.