

தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘விஸ்வரூபம்- 2’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் போன்றோர் விஸ்வரூபம்-2விலும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு வெளியாகும் அவரின் முதல் திரைப்படம், மக்கள் நீதி மையத்தின் பிரச்சார பாடலுடன் தொடங்குகிறது. முதல் பாகத்தில் உளவாளியாக ஆப்கானிஸ்தான் சென்று ஓமர் குழுவினரின் ரகசியங்களை அறிந்து அங்கிருந்து தப்பித்து வருவார் கமல். அதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த நாச வேலைகளுக்கான சதிகளை டெல்லி, லண்டன் என பறந்து சென்று எப்படி முறியடிக்கிறார்? என்பது தான் கதை. முதல் பாகத்தில் அரசியல் அர்த்தம் நிறைந்த வசனங்கள் அதிகம். ஊழல், தீவிரவாதம் என பல விஷயங்களை தொடுகிறார் கமல். சண்டை காட்சிகள், வசனங்கள், மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். கமல்ஹாசனின் தாயார் கதாபாத்திரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னாள் கதாநாயகியும் தமிழகத்தை சேர்ந்தவருமான வகீதா ரஹ்மான் நடித்துள்ளார். ஆனால் விஸ்வரூபம் முதல் பாகத்தில் உள்ள விறுவிறுப்பு இந்த படத்தில் குறைவு தான். நீளமான வசனங்கள் சில இடங்களில் சலிப்பை தருகிறது.