ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்.. பெற்றோருக்கு மருத்துவ குழு கொடுத்த பரிசு - கடலூரில் நெகிழ்ச்சி சம்பவம்
கடலூர் அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலம் 3 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், மருத்துவ குழுவினர் நன்கு பராமரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மகேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு
மருத்துவர் கவிதா தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரசவம் பார்த்தனர். அப்போது மகேஸ்வரிக்கு பரிசோதனை செய்ததில் மூன்று குழந்தைகள் இருப்பது தெரிய வந்த நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
இதில் அவருக்கு அழகான 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால், இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கடந்த 40 நாட்களாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் 3 குழந்தைகளையும் மருத்துவ குழுவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் பிறந்ததால் குழந்தையின் பெற்றோருக்கு மருத்துவ குழுவினர் பரிசு வழங்கி குழந்தைகளை பராமரிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
--