3வதும் பெண் குழந்தை..மனைவி விரலை துண்டாக்கி கொடுமை..உனவு கூட இல்லாமல் குழாய் தண்ணி குடித்து உயிர் பிழைத்த சோகம்

x

பெண் குழந்தை பெற்ற மனைவி - ஆத்திரமடைந்த கணவர், அவரது குடும்பத்தினர்

ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் பெற்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே விரிசல்

பிரசவம் முடிந்து வந்த பெண் என்றும் பாராமல் கொடுமைப்படுத்திய கணவர், அவரது குடும்பத்தினர்

கை விரல்களை உடைத்தும், தனி அறையில் அடைத்தும் துன்புறுத்தல்

உண்ண உணவு கூட அளிக்காததால், குழாய் தண்ணீரை மட்டும் பருகி உயிர் வாழ்ந்த பெண்

கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

ஆந்திராவில், 3வது பிரசவத்திலும் பெண் குழந்தையை பெற்ற மனைவியை, ஆத்திரத்தில் கை விரல்களை உடைத்து, தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு..

மீண்டும் பெண் குழந்தையா? என பொங்கி எழுந்த கணவனின் ஈவு இரக்கமற்ற செயல், பல தாய்மார்களை கோபத்தின் உச்சிக்கு தள்ளியுள்ளது ஆந்திராவில் நடந்துள்ள இந்த சம்பவம்....

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருபவர் எஸ்.எம். சந்த் பாஷா.

கடந்த 2017ம் ஆண்டு எஸ்.எம். சந்த் பாஷாவுக்கும், சபீஹா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடந்து, ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கணவன் சந்த் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினர், சபீஹாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், சந்த் பாஷாவிற்கு வேறு திருமணம் நடத்தவும் திட்டமிட்டு, அதற்கான பணிகளை, அவரது குடும்பத்தினர் மேற்கொண்டு வந்துள்ளனர்.

மகளை அடித்து துன்புறுத்துவதை சகித்துக் கொள்ள முடியாத சபீஹாவின் பெற்றோர், மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டார் மீது 3 முறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், காவல்நிலையத்தில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், 3வது முறையாக கருவுற்ற சபீஹா, மீண்டும் பெண் குழந்தையே பெற்றதால், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி...

குழந்தையை பெற்று வலுவற்ற நிலையில் இருந்த சபீகாஹாவை, ஈவு இரக்கமின்றி கணவர் சந்த் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

சபீஹாவின் கை விரல்களை உடைத்தும், தனி அறையில் அடைத்தும் சித்திரவதை செய்ததுடன், ஒரு வேளை உணவு கூட வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

வேறு வழியின்றி அடைத்து வைக்கப்பட்ட அறையில் இருந்த குழாய் தண்ணீரை மட்டுமே பருகி, சபீஹா உயிர் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது

சபீஹா நீண்ட நாட்களாக வெளியே வராததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இதுதொடர்பாக அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சபீஹாவை போலீசார் மீட்டு, பிஞ்சுக் குழந்தையிடம் சேர்த்துள்ளனர்.

இதுதொடர்பாக சந்த் பாஷா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகளை காவல்நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்களை விட பெண்கள் பல துறைகளில் தடைகளை உடைத்தெறிந்து சாதனை படைத்தும் வரும் நிலையில், பெண் குழந்தை வேண்டாம் என்கிற கணவனின் இந்த செய்கை பலரையும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்