இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்த தினம் இன்று.

x

1932ல் பாலகாட்டில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த டி.என்.சேஷன், சென்னை கிரிஸ்த்துவ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். 1954ல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பின், திண்டுக்கல் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

1968ல் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். 1972 முதல் 1976 வரை மத்திய விண்வெளித் துறையில் செயலாளராக பணியாற்றினார். பல்வேறு மத்திய துறைகளில் பணியாற்றிய, பின் 1989ல் கேபினட் செயலாளரானார்.

1990ல் இந்தியாவின் 10ஆவது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வித்திட்டு, தனது கறாரான அணுகுமுறையால் பெரும் புகழ் பெற்றார்.

அவர் தலைமை தேர்தல் ஆணையராக ஆன பிறகே தேர்தல் ஆணையத்தின் வலிமையும், இருப்பும் பெரிதாக உணரப் பட்டது. அவருக்கு முன்பு இந்த பதவியில் இருந்தவர்கள், இவரைப் போல மத்திய அரசை எதிர்த்து எதுவும் செய்த தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வாக்களிக்க வாக்காளரின் புகைப்படம் கொண்ட அடையாள அட்டை முறையை 1993ல் கொண்டு வந்ததார். தேர்தல் விதிமுறைகளை மிகக் கடுமையாக அமல்படுத்தி, பல அரசியல்தலைவர்களின் பகையை சம்பாதித்தார்.

தேர்தல் கால வன்முறைகளை பெரும் அளவில் தடுத்து, வாக்குச் சாவடிகளை கைபற்றும் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், பிரசாரங்கள் நிறுத்தப் படவேண்டும் என்றும், தேர்தல் அன்று, வாக்குச் சாவடிக்கு அருகில் பிரச்சாரம் நடத்தக்கூடாது போன்ற விதிகளை கடுமையாக அமல்படுத்தினார்.

தேர்தல் செலவுகளை பற்றி தவறான தகவல்களை அளித்ததற்காக சுமார் 14,000 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து அதிரடி காட்டினார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், 1997 குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1996ல் ராமொன் மேகசேசே விருது பெற்றார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் சக்தியை முதல் முறையாக நிருபித்து காட்டிய டி.என்.சேஷன் மறைந்த தினம், 2019 நவம்பர் 10.


Next Story

மேலும் செய்திகள்