"நான் இருக்கும் போது வேற பொண்ணா..!"பத்ரகாளியான மனைவி..கள்ளக்காதல் வெறி..கொதிக்கும் குழம்பை ஊற்றிய கணவன்

x

விழுப்புரம் அருகே, வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவி மீது, கொதிக்கும் குழம்பினை ஊற்றிய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

நான் இருக்கும் போது, வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பா? என கேள்வி எழுப்பிய மனைவி மீது, ஈவு இரக்கமின்றி அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பினை ஊற்றிய சம்பவம் தான் இது...

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் பகுதியில், ஆரோக்கியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஆரோக்கியசாமி, அதே பகுதியில் உள்ள வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம், மனைவியான பெரியநாயகிக்கு தெரியவர, வீட்டில் கலவரமே வெடித்துள்ளது.

என்னதான் மனைவி பத்ரகாளியாக மாறி அடிக்கடி சண்டையிட்டாலும், அந்தப் பெண்ணுடனான உறவை கைவிடப்போவதில்லை என உறுதியாய் இருந்துள்ளார் ஆரோக்கியசாமி.

ஒருகட்டத்தில் விரக்தி அடைந்த பெரியநாயகி, கணவனுக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையேயான உறவு குறித்து, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல்நிலையத்தில் கணவன் மனைவிக்கு இடையே சமாதனத்தை ஏற்படுத்திய போலீசார், ஆரோக்கியசாமியை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

போலீஸ் ஸ்டேசன் சென்று வீடு திரும்பினாலும், ஆரோக்கியசாமியின் நடவடிக்கையில் சிறிதும் மாற்றம் இல்லாததால், விரக்தி அடைந்த பெரியநாயகி, கணவனிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பதிலுக்கு ஆரோக்கியசாமியும் மனைவியிடம் கடும் வாக்குவாதம் செய்ய, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பினைக் கொண்டு வந்த அப்படியே பெரியநாயகியின் உடலில் ஊற்றியுள்ளார். இதில் சூடு தாங்க முடியாமல் அலறித் துடித்துள்ளார் பெரியநாயகி.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், பெரியநாயகியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெரியநாயகி, கணவன் மீது மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆரோக்கியசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளத்தொடர்பினை தட்டிக்கேட்ட மனைவி மீது கொதி நிலையில் இருந்த குழம்பினை ஊற்றிய கணவனின் கொடூர செயல் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்