நண்பர்களுடன் சேர்ந்து இன்சூரன்சுக்காக தந்தையை கொன்ற 17 வயது மகன்.. - சிவகங்கையில் அதிர்ச்சி

x

தகப்பனைக் கொன்று, அதனை மறைக்க விபத்தில் இறந்ததுபோல் நாடகமாடிய மகனின் செயலைக் கண்டு போலீசாரே அதிர்ந்து போன சம்பவம் இது... மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் உதய கண்ணன். இவரது மனைவி புஷ்ப லதா. இவர் தனது கணவனை காணவில்லை என 10 நாட்களுக்கு முன்பு, மானாமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உதயகண்ணனை போலீசார் தேடி வந்த நிலையில், சீராம் பட்டி கிராம சாலை அருகே மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தது போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்தபோது, உதயகண்ணனின் இருசக்கர வாகனம் ஒருபக்கம் விபத்தில் சிக்கியது போல் இருந்தாலும், மறுபக்கம் வாகனம் உடைத்தது போல் காணப்பட்டதால், போலீசாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கொலையாக இருக்குமோ என போலீசார் சந்தேகித்தனர். மேலும், மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உடலை பார்க்க வந்த குடும்பத்தாரும் பெரிதாக கவலைப்படாததால், போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் இறந்த உதயகண்ணனின் செல்போனை ஆய்வு செய்து, அதில் கடைசியாக பேசிய நபர் யார் என்பதை தேடினர். கடைசியாக தனது 17 வயது மகனுடன் உதய கண்ணன் பேசியது தெரியவந்தது. பின்னர், உதயகண்ணனின் மனைவி, மகள், மகன் என 3 பேரிடம், பாபநாசம் திரைப்படம் பாணியில், போலீசார் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் 17 வயது மகன் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததில், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.உதயகண்ணனுக்கு சொந்தமாக 2 லாரிகள் உள்ள நிலையில், அதற்கு சரியாக மாதத்தவணை கட்டாமல், தகாத உறவில் இருந்த பெண்ணிடம் வருமானத்தை அள்ளி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பம் பண நெருக்கடிக்கு ஆளான நிலையில், சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் உதயகண்ணன்.

வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், திடீரென மகனின் செல்போன் எண்ணை அழைத்து உதயகண்ணன் பேசியுள்ளார். அப்போது, ஆத்திரத்தில் இருந்த 17 வயது மகன், தந்தையை பார்க்க வேண்டும் எனக்கூறி, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு, தனது நண்பர்கள் உதவியுடன் உதயகண்ணனை கொலை செய்தது, விசாரணையில் அம்பலமானது.அதனைத் தொடர்ந்து இந்த கொலை சம்பந்தமாக, உதயக்கண்ணனின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக இறந்த உதய கண்ணனின் மனைவி புஷ்பலதா மற்றும் அவருடைய மூத்த மகளையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்