500 MBBS இடங்கள் பறிபோகும் ஆபத்து... தமிழகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் - அரசின் அடுத்த நடவடிக்கை என்ன..?

x

தமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட, 3 மருத்துவக் கல்லூரிகளுக்கான இளநிலை இடங்களுக்கான அங்கீகாரத்தை திரும்ப பெற இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் பின்னணி என்ன? தமிழக சுகாதாரத்துறை அடுத்து என்ன செய்யப்போகிறது? என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு...

தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதியுடன் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இதில் 38 அரசு கல்லூரிகளில் 5 ஆயிரத்து 225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் மூன்று மருத்துவக் கல்லூரிகள், அதன் இளநிலை அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, திருச்சி அரசு கேஏபி விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை இந்த சிக்கலை எதிர் கொண்டு உள்ளன.

பயோ மெட்ரிக் வருகைப் பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி, இந்த 3 கல்லூரிகளுக்கு இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக இந்த கல்லூரிகளில் உள்ள 500 எம்பிபிஎஸ் இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 3 மருத்துவக் கல்லூரிகளும் தமிழகத்தின் பழமை வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளாகும்.

சிசிடிவி மற்றும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு குறைபாடு காரணமாக அங்கீகாரத்தை திரும்ப பெறும் வகையிலான நிகழ்வுகள், இதற்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்றது இல்லை என்று முன்னாள் மருத்துவ கல்வி துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் முறையான பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு தான், ஒரு மருத்துவமனையில் எத்தனை மருத்துவர்கள் உள்ளார் என்பதற்கு சான்றாகும். அதேபோன்று சிசிடிவி காட்சிகள் தான் மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வந்து சென்றதற்கும் சான்று. இவை இரண்டும் முறையாக இல்லாத காரணத்தால் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது.

இந்நிலையில், இந்த மருத்துவக் கல்லூரிகளிலும் உடனடியாக இந்த வசதிகளை சரி செய்ய தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. உடனடியாக இவற்றை சரி செய்து, அது தொடர்பான ஆவணங்களை இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்திற்கு சமர்பிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இது மிகவும் சிறிய பிரச்சனை தான் என்பதால், ஆவணங்களை சமர்பித்த பிறகு உடனடியாக அனுமதி கிடைத்துவிடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்லூரிகளின் அனுமதி தொடர்பாகவும், சுகாதாரத்துறையின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்திக்க உள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்படி வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்