விழுப்புரத்தில் தந்தை வாங்கிய கடனுக்காக மகனை காலணியால் அடித்த கொடூரம் விழுப்புரம் அருகே தந்தை வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதற்காக, பத்தாம் வகுப்பு படிக்கும் பழங்குடி சமூக மாணவனை நடுரோட்டில் செருப்பால் அடித்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி சமுகத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மேஸ்திரி பிரபாகரன் என்பவர் மூலம், வைத்தியலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.... ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்று ரமேஷ் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது... இந்நிலையில் ரமேஷ் முறையாக வேலைக்குச் செல்லாததால் ஆத்திரமடைந்த மேஸ்திரி பிரபாகரன், ரமேஷின் வீட்டிற்குச் சென்று தேடியுள்ளார். அங்கு ரமேஷ் இல்லாததால், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அவரது 15 வயது மகனை நடுரோட்டில் வழிமறித்துள்ளார். "உன் தந்தை வாங்கிய கடனைத் திருப்பித் தா" என்று மிரட்டியதோடு, அந்த சிறுவனை காலணியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுவன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மேஸ்திரி பிரபாகரனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.