கணவர், குழந்தையுடன் விஜய்யை காண சென்ற பெண் பலி
விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்துக்கு கணவர் மற்றும் மகளுடன் சென்ற பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் செம்மாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுலப்ரியா.
இவருக்கு ஜெயபிரகாஷ் உடன் ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ஐந்து வயது மகள் இருக்கிறார்.
கணவன் மனைவி இருவரும் விஜய்யின் தீவிர ரசிகர்கள் என்பதால், குழந்தையுடன் பைக்கில் 45 கிலோமீட்டர் தூரம் பயணித்து வேலுச்சாமிபுரத்திற்கு சென்றிருக்கிறார்கள்...
மூச்சடைக்க வைக்கும் கூட்டம். தண்ணீர் கூட குடிக்க முடியாமல் திக்குமுக்காடிய நிலையில், ஜெயப்ரகாஷ் வீட்டுக்கு கிளம்பலாம் என அழைத்திருக்கிறார்.
ஆனால், அவரிடம் குழந்தையை கொடுத்த கோகுலப்ரியா, விஜய்யை பார்த்து விட்டு தான் வருவேன் என்று அடம்பிடித்திருக்கிறார்.
அடுத்த சில நிமிடங்களில் பெரும் கோரம் அரங்கேறியது. விவரம் புரியாத குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு, மாயமான மனைவியை தேடி அலைந்திருக்கிறார் ஜெயப்ரகாஷ்.
ஆனால், அரசு மருத்துவமனையில் கோகுல ப்ரியாவை சடலமாகவே பார்க்கும் துயரம் அவருக்கு நேர்ந்திருக்கிறது.
தனது குடும்பத்தின் எதிர்காலமே சிதைந்து போனதை எண்ணி அவர் நிலைகுலைந்து போயிருக்கிறார்.
கோகுலப்ரியாவின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கி கிடக்கிறது.