ஆரணி அருகே சிறுவன் ஜலசமாதி சம்பவத்தில் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்கள் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆரணி அருகே படவேடு அடுத்து ராமநாதபுரம் என்ற கிராமத்தில் 16 வயது சிறுவனை ஜலசமாதி செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சிறுவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் , சிறுவன் கிணற்றில் விழுந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்ததில், நுரையீரல் வெடித்து தான் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வரும் 29 ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததுள்ளதால், அதன்பிறகே இந்த சம்பவத்தின் மர்மம் விலகும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.