பணிச்சுமையால் மன உளைச்சல்? போக்குவரத்து ஊழியர் தற்கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில், கூடுதல் பணியை செய்ய வற்புறுத்தியதாகக் கூறி, போக்குவரத்து பணிமனை தொழில்நுட்ப ஊழியர் மன உளைச்சலில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
34 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 59 வயதான பாஸ்கரனுக்கு, ஓய்வு பெற இன்னும் 11 மாதங்களே இருந்த நிலையில், சோளிங்கர் பணிமனையில் ஸ்டோர் பொறுப்பாளர் பணிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பணியில் இருந்த சிக்கல்கள் குறித்து உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மனமுடைந்த பாஸ்கரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.