பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆந்திர அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கங்குந்தி என்ற இடத்தில் பாலாற்றில் உள்ள தடுப்பணையின் உயரத்தை, 22 அடியில் இருந்து 40 அடியாக உயர்த்தும் பணிகளை அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் நவீன் சின்ஹா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆந்திர அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ஆந்திர அரசு பதில் மனு தாக்கல் செய்த அடுத்த 2 வாரத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.