நெல்லையில் கிணறு தோண்டிய பணிக்கு உரிய ஊதியம் வழங்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கேசவ மூர்த்தி கிணறு தோண்டும் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் திசையன்விளை, பெருங்குளத்தை சேர்ந்த மருத்துவர் கார்த்தீசன் என்பவரின் தோட்டத்தில் கிணறு தோண்டப்பட்டது. அதற்கு பேசிய 14 லட்ச ரூபாய் சம்பளத்தை தர மறுத்த மருத்துவரை கண்டித்து கேசவ மூர்த்தி குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி காவலர்களை தள்ளிவிட்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் தொழிலாளர்கள் நுழைந்தனர். மாவட்ட ஆட்சியர் பிரச்சினைக்கு தீர்வு காண உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.