சேலம் மாவட்டம் சங்ககிரியில் முதலமைச்சர் குறைதீர்க்கும் திட்ட சிறப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 592 பேருக்கு 5 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளங்கள் சிறப்பான முறையில் தூர்வாரப்பட்டு வருவதாக கூறினார். திமுக ஆட்சியில் இருக்கும் போது ஸ்டாலின் ஒரு ஏரியையாவது பார்வையிட்டாரா என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் பழனிசாமி, காவிரி, கோதாவரி இணைப்பு திட்டம் வைகை குண்டாறு வரை நீட்டிக்கப்படும் என தெரிவித்தார். மேட்டூர் அணையை தூர்வாரி சரித்திர சாதனை படைத்தது அதிமுக அரசு என்றும் அவர் தெரிவித்தார். 5 லட்சம் முதியோருக்கு உதவி தொகை வழங்கப்படும் என்றும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தால் உடனடியாக வழங்கப்படும் என்றும் கூறினார்.