சென்னையில் காரில் பதுக்கி வைத்திருந்த சுமார் 400 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். பாரிமுனை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வடக்கு கடற்கரை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் செம்மரக்கட்டைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் ஆண்டனி, மண்ணடியை சேர்ந்த செங்கிஸ்கான், முகமது அஷார் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.