Chennai | Minister Srinath | காசிமேடு துறைமுகத்தில் படகு ஓட்டி ஆய்வு நடத்திய அமைச்சர் ஸ்ரீநாத் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்ட நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், விசைப்படகை இயக்கி அசத்தினார். 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவோடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, காசிமேட்டில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல தொடங்கிய நிலையில் அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வை மேற்கொண்டார். துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், திடீரென விசைப்படகில் ஏறி கடலில் சிறிது தூரம் பயணித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீனவர்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு மானிய டீசல் அளவை உயர்த்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், ஆந்திராவில் தமிழக விசைப்படகுகள் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடைக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அவர் கூறினார்.