பெங்களூரு நகரில் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டே பகுதிநேரமாகப் பணியாற்றி வந்த அம்ருதா, தனுஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், தனுஷிற்கு ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றதும், ஒரு குழந்தை இருப்பதும் அம்ருதாவிற்குத் தெரியவந்துள்ளது. உண்மைகளை மறைத்ததால் அதிர்ச்சியடைந்த அம்ருதா, உடனடியாக அந்த உறவை முறித்துக் கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தனுஷின் தம்பி சூர்யா, வேலைக்குச் சென்று கொண்டிருந்த அம்ருதாவை ஓடிவந்து பின்னாலிருந்து சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். அதைத் தடுக்க முயன்ற அக்கம் பக்கத்தினரையும் அவர் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த அம்ருதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஜீவன் பீமா நகர் காவல்துறையினர், சூர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். காதலை நிராகரித்ததால் தான் இந்த கொடூர சம்பவம் நடந்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், பணத் தகராறு உட்பட அனைத்துக் கோணங்களிலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.