வணிக எல்பிஜி சிலிண்டர் ஒதுக்கீட்டில் அதிரடி மாற்றம் மேற்கு ஆசியப் போர் மற்றும் எரிவாயு விநியோகத் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் ஒதுக்கீட்டில் கூடுதல் துறைகளுக்கு மத்திய அரசு சலுகை அளித்துள்ளது. மாநிலங்களுக்கான வணிக எல்பிஜி ஒதுக்கீடு 70 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மருந்து, உணவு, விவசாயம் உள்ளிட்ட முக்கியத் துறைகளும் இந்த 70 சதவீத ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி மருந்து, கண்ணாடி, எஃகு மற்றும் பேக்கேஜிங் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள், கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு தாங்கள் பயன்படுத்திய அளவில் 70 சதவீத எரிவாயுவை விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இத்துறைகள் அனைத்திற்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 0.2 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டே எரிவாயு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.