பீகாரில் தேர்தல் பார்வையாளர்கள் வாக்குச் சாவடிகளைப் பார்வையிடவும், வாக்காளர்களின் வசதிக்காக ஆணையத்தால் எடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சிகளை செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.பீகார் மாநிலத்திற்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் 287 ஐஏஎஸ் அதிகாரிகள், 58 ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஆர்எஸ், ஐசிஏஎஸ் என மொத்தம் 425 அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் அனைத்து தேர்தல் சட்டங்கள், விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றும், நேரடி கள உள்ளீடுகளை அவர்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க முழுமையாக அணுகக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். பார்வையாளர்கள் வாக்குச் சாவடிகளைப் பார்வையிடவும், வாக்காளர்களின் வசதிக்காக ஆணையத்தின் சமீபத்திய உத்தரவுகளை, நடைமுறைப்படுத்தியது குறித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.