"பரிசோதனைகளை குறைப்பது விபரீத முயற்சி" - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கொரோனா தொற்று பரிசோதனைகளைக் குறைப்பதன் மூலம், நோய்த் தொற்று எண்ணிக்கை குறைத்து காட்ட, தமிழக அரசு முயற்சி செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2020-05-17 12:08 GMT
கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்காக, பரிசோதனை செய்யப்படும் எண்ணிக்கையை தமிழக அரசு படிப்படியாகக் குறைத்து வருகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மே 7 ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 14 ஆயிரத்து 102 என்கிற அளவில் இருந்த பரிசோதனை எண்ணிக்கை,படிப்படியாக 40 சதவீதம்வரை குறைக்கப்பட்டு 8 ஆயிரத்து 270 ஆக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கோயம்பேடு சந்தைக்கு வருபவர்களுக்கு டோக்கன் கொடுத்து,தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முன்யோசனையற்ற அரசு, தற்போது, டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் அக்கறையுடன் செயல்படுவதாக விமர்சனம் செய்துள்ளார். கொரோனா தொற்றை தடுக்க அமைக்கப்பட்ட மருத்துவர்கள் குழு, பரிசோதனைகளைக் குறைக்க கூடாது என்றும், அதிகச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்துள்ள நிலையில் பரிசோதனைகளை குறைப்பது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். கனமழை காரணமாகவும் நோய் பரவும் விகிதம் அதிகரிக்கும் நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ள நிலையில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் என்ன என்றும் கேட்டுள்ளார். பரிசோதனை செய்வதற்கான கருவிகள் இருந்தும் பரிசோதனை செய்ய வேண்டாம் என கெடுபிடி செய்வதும், பரிசோதனை செய்யாமல் நோயே இல்லை என்று காட்ட முயற்சி செய்வதும் விபரீதத்தை விளைவிக்கும் என்றும் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை செய்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்