108 ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா தொற்று - இன்று புதிதாக தொற்று ஏற்பட்டு உள்ளதால் கரூரில் பரபரப்பு
நேற்று கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிய கரூரில் இன்று ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 108 ஆம்புலன்ஸில் சென்ற உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கரூர் மாவட்டம் கடம்பன்குறிச்சி சேர்ந்த 25 வயதான அரவிந்த், சென்னை ராயபுரத்தில் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக பணியாற்றி வந்தார். உறவினரின் இறுதி சடங்குக்கு கடந்த 24 ஆம் தேதி வந்த அரவிந்த், சென்னைக்கு திரும்ப விரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து கருரிலேயே பணியாற்ற உயரதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அதிகாரிகள் அனுமதியை தொடர்ந்து, 27ஆம் தேதி வெள்ளியணை பகுதியில் இயக்கப்படும் 108 ஆம்புலன்ஸில் உதவியாளர் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், 28 ஆம் தேதி, சென்னை ராயபுரத்தில் அவருடன் பணியாற்றிய நண்பர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அரவிந்தனுக்கும் இன்று ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது தொடர்ந்து அவர் அதிகாலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மேலும் அவரது தாய், தந்தை, உறவினர்கள் உடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் இன்று ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 42 நபர்களும் பூரண குணமடைந்து நேற்று மாலை வீடு திரும்பினர். இந் நிலையில் இன்று அதிகாலை அரவிந்தன் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.