"உள்ளாட்சி - தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்" - உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கில் சட்டப்பூர்வ காரணங்களுடன் கூடுதல் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-03 11:23 GMT
மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட  பதவிகளுக்கு மறைமுக தேர்தல் மூலம் நிரப்ப வகை செய்யும் வகையில் நவம்பர் 19-ம் தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனை  எதிர்த்து, சென்னை தாம்பரத்தை சேர்ந்த யேசுமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. 
அப்போது,  அரசின் நடைமுறை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும், எனவே அவசர சட்டத்தை  ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.இதற்கு முன்பும் மறைமுக தேர்தல் மூலமாக தலைவர் பதவிகள் நிரப்பப்பட்டதை  சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மறைமுக தேர்தல் ஊழல் நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.
மனுவில், சட்டப்பூர்வ காரணங்கள் ஏதும் கூறப்படவில்லை என்றும்,  சட்டப்பூர்வ காரணங்களுடன் கூடுதல் மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை டிசம்பர் 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்