கம்பீரமான தோற்றம் அதிர வைக்கும் சப்தம் : இளைஞர்களின் விருப்பத் தேர்வான புல்லட்

சாலைகளில் ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் ஓடினாலும், ஒரு கணம் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும் 'பைக்' என்றால் அது 'புல்லட்' தான்.
கம்பீரமான தோற்றம் அதிர வைக்கும் சப்தம்  : இளைஞர்களின் விருப்பத் தேர்வான புல்லட்
x
சாலைகளில் ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் ஓடினாலும், ஒரு கணம் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும் 'பைக்' என்றால் அது 'புல்லட்' தான். அனைவரையும் ஈர்ப்பது அதன் கம்பீரமான தோற்றமும், 'டுப்...டுப்...' என்ற அதிர வைக்கும் சத்தமும் தான். ஒரு காலத்தில் ராணுவத்தினரும், காவல்துறையினரும் தங்கள் ரோந்துப் பணிக்காக 'புல்லட்' வாகனத்தைப் பயன்படுத்தினார்கள். பின்னர் பொதுமக்களின் கவனம் புல்லட் பக்கம் திரும்பியது.

அந்தக் காலத்தில் தமிழகத்து கிராமத்து மைனர்களின் தேர்வாக புல்லட் இருந்தது. மல்லு வேட்டியும் சில்க் ஜிப்பாவும் அணிந்து கொண்டு, தங்கச்சங்கிலி கழுத்தில் மினுமினுக்க, கம்பீரமாக புல்லட்டில் பயணிப்பது மைனர்களின் 'ஸ்டைல்' ஆக இருந்தது. காலங்கள் மாறும்போது காட்சிகள் மாறும் என்பதற்கு ஏற்ப இன்று, பெரும்பாலான இளைஞர்களின் விருப்பத் தேர்வாக 'புல்லட்' மாறிவிட்டது. இதற்கு ஏற்ப பல நவீன வசதிகளுடன் புல்லட் பைக்குகள் வந்துவிட்டன.

புல்லட் பைக் வைத்திருப்பது 'கம்பீரத்தின் அடையாளம்' என இன்றைய இளைஞர்கள் கருதுகிறார்கள். இந்திய சாலைகளில் கம்பீரமாக வலம் வரும் புல்லட்டுக்கு வயது 117.

இங்கிலாந்தில் 'என்பீல்ட்' என்ற இடத்தில் 'ராயல் ஸ்மால் ஆர்ம்ஸ் பேக்டரி' என்ற பெயரில் ஆயுதங்கள் தயாரித்து விற்கும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
அதுவே பின்நாட்களில் 'என்பீல்டு சைக்கிள் கம்பெனி' ஆக மாறியது.இந்த நிறுவனம் துப்பாக்கி குண்டு அதாவது புல்லட் தயாரிப்பில் புகழ்பெற்று இருந்ததால் தங்களது முதல் மோட்டார் சைக்கிளுக்கு 'புல்லட்' என்று பெயர் சூட்டினர். 1901 ஆம் ஆண்டு புல்லட் தயாரிப்பு தொடங்கப்பட்டது. இப்போது 117 வயதைக் கடந்து, உலக சாலைகளில் கம்பீரமாக புல்லட் வலம் வருகிறது.

1949 ல் இந்தியாவில் புல்லட் விற்பனை தொடங்கியது.1955 ல் திருவொற்றியூரில் இந்தியன் மெட்ராஸ் மோட்டார்ஸ் என்ற பெயரில் புல்லட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனம் இந்நிறுவனத்தை வாங்கியது. தற்போது இளைஞர்களின் விருப்பத்திற்கேற்ப அழகிய வண்ணங்களில் பல்வேறு வசதிகளுடன், புல்லட் பைக்குகள் தயாராகிறது.

ஒருகாலத்தில் புல்லட் வாங்க வேண்டும் என்றால் பணம் செலுத்திவிட்டு சிலமாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த காத்திருப்பு காலத்தை வெகுவாகக் குறைத்ததில் சென்னை ஒரகடம் ஆலைக்கு முக்கிய பங்குண்டு. இந்த நவீன ஆலையின் உற்பத்தித்திறன் காரணமாக புல்லட் பைக்குகளை காத்திருப்பு காலம் இன்றி இப்போது உடனே வாங்க முடிகிறது.

Next Story

மேலும் செய்திகள்