விடுதலை போராட்ட தியாகியின் ஓய்வூதியம் மறுப்பு..உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
தேனி விடுதலை போராட்ட தியாகியின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது.
தேனியைச் சேர்ந்த சாயிதா பேகம் என்பவரது கணவரான முகமது ஷெரீப், விடுதலை போராட்ட தியாகி என்பதால், தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் கேட்டு சாயிதா பேகம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், முகமது, தியாகிகள் பென்ஷன் பெறாததால், குடும்ப ஓய்வூதியம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சாயிதா பேகமின் கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதையும் மீறி அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சாயிதா பேகம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், தியாகிகள் அனுபவித்த துன்பத்திற்கும், தியாகத்திற்கும் கடன் பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிமன்றம், இது போன்ற தியாகத்தை புரிந்து கொள்ளாமல் அதிகாரத்தில் மறுப்பது என்பதை எப்போதும் நியாயப்படுத்த முடியாது என்று எச்சரித்தது. அத்துடன் மனுதாரருக்கு சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப பென்ஷன் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து, சாயிதா பேகமின் மனுவை தேனி ஆட்சியர், 6 வாரத்திற்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
Next Story