பாமகவுக்கு எதிரான நோட்டீஸ் - ரத்து செய்ய மறுப்பு
மரக்காணம் கலவரம் தொடர்பாக பாமகவுக்கு அனுப்பிய விசாரணை நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த 2013ல் நடைபெற்ற மரக்காணம் கலவரத்தில் பொது சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பாமகவுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி பாமக தலைவர் ஜிகே மணி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த கலவர வழக்கில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீடு வசூலிக்க எந்தவித தடையும் இல்லை எனக் குறிப்பிட்டார். கலவரம் தொடர்பாக போக்குவரத்து துறை அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளிக்குமாறு பாமகவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் சமூகத்தின் மீதான கடமையை உணர்ந்து, போராட்டங்களில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். 29 ஆண்டு காலமாக முறையாக அமல்படுத்தப்படாத தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டத்தை இனி வரும் காலங்களில் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசுக்கு நீதிபதி ஆணையிட்டார்.
Next Story