நடமாடும் காய்கறி வாகனங்கள் - ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற மக்கள்
தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் விற்பனை தொடங்கியுள்ளது. இதுபற்றிய செய்தித் தொகுப்பு...
அதி வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு கடிவாளம் போட, தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மே-31-ம் தேதி வரை காய்கறி கடைகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இதன்படி, தமிழகமெங்கும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை தொடங்கியது. கோவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனும் இணைந்து காய்கறி வாகனங்களை தொடங்கி வைத்தனர்.உழவர் சந்தையில் விற்கப்படும் விலைக்கே காய்கறிகள் விற்பனை செய்யப்பட இருப்பதாக அப்போது அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழகம் முழுவதும் நடமாடும் வாகனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.சிவகங்கை மாவட்டத்தின் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மங்கள இசையுடன் ஒலிபெருக்கியில் அறிவித்தவாறே காய்கறி வாகனங்கள் வலம் வந்தன.கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட மணலூர் பேட்டை பேரூராட்சியில் ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கிச் சென்ற மக்கள், காய்கறிகள் எளிதாக கிடைப்பதாக கூறினர்.முக்கியமாக, நேற்று மும்மடங்கு விலை உயர்த்தி காய்கறிகள் விற்கப்பட்டதாக குற்றம்சாட்டிய மக்கள், நடமாடும் வாகனங்களில் கிடைக்கும் காய்கறிகளின் விலை சற்று குறைவாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.நகர்ப்பகுதிகளில் மட்டுமின்றி கிராமப்புற பகுதிகளுக்கும் காய்கறிகள் நடமாடும் வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Next Story
